அட்சய திருதியை நாள் தவிர்த்து, வேறு எந்தெந்த நாட்களில் தங்கம் வாங்கினால் தங்கம் பல மடங்காக பெருகும்?

தங்கம் என்பது இன்று கிராம் 4,000 ரூபாய் வரை சென்றுவிட்டது. அனைவருக்கும் தங்கம் என்பது இனிவரும் காலங்களில் எட்டாக் கனியாக மாறும் சூழ்நிலை விரைவில் உருவாகலாம்.

அட்சய திருதியை அன்று தான தர்மம் செய்து பலருக்கு உணவளித்தல் உன்னதமான, புண்ணியமாக கருதப்படுகிறது.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்னும் நிலையாக, அந்த ஒரு குறிப்பிட்ட நாளில் சிலருக்கு கையில் பணம் இருக்காது. மற்ற நாளில் பணம் இருந்தால் அன்றைய தினம் அட்சய திருதியையாக இருக்காது.

தங்கம் வாங்குவது அவரவர் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று வேதத்தில் குறிப்பிடப்படவில்லை.

அன்றைய தினம் செய்யும் செயல்கள் பல்கிப் பெருகும் என்பதால் சுபநிகழ்ச்சிகளை தாராளமாக செய்யலாம்.

தங்கம் வாங்கினால் தங்கம் பெருகும் என்ற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், இது அவரவர் தனிப்பட்ட விஷயம் சார்ந்தது. ஆகையால் அவரின் பொருளாதார நிலைக்கேற்ப தங்கம் வாங்கிக் கொள்ளுங்கள்.

ஆனால் எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி தங்க நகை வாங்க வேண்டாம்.

தங்கநகை ஒருவருக்கு அதிகமாக சேர வேண்டுமானால் அவருடைய சுய ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருக்க வேண்டும்.

வேத ஜோதிடத்தில் குரு பகவானுக்கு பொன்னன் என்ற பெயர் உண்டு.

தங்கம் என்ற உலோகத்திற்கு அதிபதி குரு பகவானே.

குருவும் சுக்கிரனும் எதிரெதிர் கிரகங்கள் என்பதால் குருவிற்கு சுக்கிரனின் பார்வை கிடைப்பதைவிட வளர்பிறை சந்திரனின் பார்வை கிடைப்பது நல்ல அமைப்பு.

அதாவது அவர்களுடைய சுய ஜாதகத்தில் குரு சந்திர யோகம் இருப்பவர்களுக்கு தங்க நகை அதிகமாக சேரும். குரு ஜாதகத்தில் கெடாமல் நன்கு வலுத்திருக்க வேண்டும்.

நாம வாழ்கிற இந்த கலாச்சாரத்தில் பெண்பிள்ளைகளுக்கு, இன்றைக்கும் வரதட்சணை கொடுத்து தான் திருமணம் செய்கிறோம்.

( பெண் பிள்ளைகளை பெற்றோருக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.)

  1. லக்னத்தில் குரு இருக்கும் போது தங்க நகை வாங்கினால் அது மேலும் மேலும் விருத்தியாகும்.
    கோட்சாரத்தில் குரு உங்களுடைய ஜென்ம லக்னத்தில் இருக்கும் காலகட்டங்களிலோ, அல்லது தங்கம் வாங்க வேண்டிய நாளில் லக்னத்தில் குரு இருக்கும்போது தங்கம் தாராளமாக வாங்கலாம்.
  2. ஒரு நாளின், குரு ஓரையில் தங்க நகை வாங்கலாம்.
  3. குருவிற்கு ஏழாம் இடத்தில் சந்திரன் இருக்கும் போது அதுவும் வளர்பிறைச் சந்திரன் ஆகி குரு சந்திர யோகத்தில் இருக்கும் போது, குரு ஹோரையில் தங்கம் வாங்கினால் தங்க நகை பல்கிப் பெருகும்.
  4. குரு வர்கோத்தமம் ஆகும் காலங்களில் தங்க நகை தாராளமாக வாங்கலாம்.
  5. ஒரு மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில்,குரு ஹோரையில் தங்கம் வாங்கலாம்.வியாழக்கிழமையாக அன்றைய தினம் அமைந்து அஸ்த நட்சத்திரம் சேர்ந்தால் மிகச் சிறப்பு.
  6. கோச்சாரத்தில் சூரியனும், சந்திரனும் ,குருவும் பலம் பெற்று ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் நேரத்தில் தாராளமாக தங்க நகை வாங்கலாம்.

அட்சய திரிதியை நாளை இன்று தவற விட்டவர்களுக்கு மேற்கண்ட காலகட்டங்கள் தங்கம் வாங்க சிறப்பானதாக இருக்கும் .

இந்த காலங்கள் ஜோதிடத்தில் சாஸ்திர ரீதியாக தங்கம் வாங்க சிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த காலகட்டங்களில் தங்க நகை வாங்கினால் கண்டிப்பாக பல்கிப் பெருகும் என்பதில் ஐயமில்லை.

தற்போது கொரோனாவால் ஊரடங்கு நிலை இருப்பதால், தங்கம் வாங்க சாத்தியமில்லை. அட்சய திருதியை நாள் தவிர்த்து மேற்சொன்ன காலகட்டங்களில் தங்கம் தாராளமாக வாங்கலாம்.

தங்கம் உங்களிடம் எப்பொழுதும் தங்க, அட்சய திருதியை நாள் தவிர்த்து மேற்கொள்ள காலகட்டங்களை எப்பொழுதும் உங்களுடைய வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அதைவிட முக்கியமாக இல்லாதவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யுங்கள்.

விலங்குகளுக்கும் உணவளிக்கலாம்.

எதுவுமே முடியாதவர்கள் கைப்பிடி அரிசியை எறும்பு புற்றில் தூவுங்கள். நிச்சயம் அந்த புண்ணியம் உங்களை காக்கும்.

ஓம் நமசிவாய

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More